கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை

நாமக்கல், நவ.2: கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது: நாமக்கல் மாவட்டத்தில் பிரதான தொழிலாக கோழிப்பண்ணை தொழில் உள்ளது. இந்த தொழிலை நம்பி தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கில், கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்ப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.புதிய பண்ணைகள் அமைப்பதற்கு தடை விதித்திருப்பதால், ஏற்கனவே வங்கிகளில் கடன் பெற்று கோழிப்பண்ணைகளை அமைக்கத்தொடங்கியவர்கள் செய்வதறியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் அதுவும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் தான் கோழிப்பண்ணைகள் நிறைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் கோடிக்கணக்கான முட்டைகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு நீடித்தால், கோழிப்பண்ணை தொழில் முற்றிலும் நலிவடைந்து முட்டை விலை, மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகும். கிராமங்களில் வேலைவாய்ப்புகளை தருகின்ற தொழிலாகவும், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற தொழிலாகவும் கோழிப்பண்ணை தொழில் இருந்து வருகிறது. புதிதாக கூறியுள்ள வழிமுறைகளின் படி கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் திறந்தவெளியில் வளர்ப்பதற்கு அதிகமான இடம் தேவைப்படும். கோழிகளை திறந்தவெளியில் வளர்க்கும் போது தண்ணீரும், தீவனமும் அதிகமாக வீணடிக்கப்படுவதோடு, முட்டைகளின் சேதாரமும் அதிகரிக்கும். இதனால் முட்டை உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். அதேபோல் கூண்டுகளில் அடைக்காமல் கோழிகளை தரையில் வளர்க்கும் போது, கோழிகளின் கழிவுகளை அகற்றுவதிலும் சிரமம் ஏற்படும். ஒவ்வொரு கோழிப்பண்ணைகளிலும் இருக்கும் லட்சக்கணக்கான கோழிகளை திறந்தவெளியில் வளர்ப்பதென்பது சாத்தியமற்றது. எனவே கோழிப்பண்ணையாளர்களிடத்தில் கலந்தாலோசித்து திறந்த வெளியில் கோழிகளை வளர்க்கும்போது ஏற்படும் பாதிப்புகளையும், சிரமங்களையும் உரிய முறையில் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணை தொழிலை மத்திய, மாநில அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: