நாகர்கோவில், அக்.17: நாகர்கோவில் நகரில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை இருந்தது. இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. நாகர்கோவில் கணியான்குளம் ஊராட்சிக்குட்பட்ட ரயில்வே நகர் பகுதியில் கிருஷ்ணன்கோவில் சானல் செல்கிறது. இந்த சானல் தற்போது ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சானல் இருப்பது தெரியாமல் கட்டிடங்கள் உருவாகி உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை பெய்த மழையால் பள்ளிவிளை பகுதியில் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்தது. இதில் ரயில்வே நகர் பி பிளாக் 4 வது தெரு, 3 வது தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையிலும் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.