வாகனம் மோதி ஒருவர் பலி

பெ.நா.பாளையம்: கோவை பெ.நா.பாளையம் அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. அதன் அருகே சம்பவத்தன்று முதியவர் ஒருவர் சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெ.நா.பாளையம் போலீசார் படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ரத்தினம் (65), என்பதும் அவர் நீலம்பூரில் உள்ள லாரி பேட்டையில் தங்கி லாரிகளுக்கு கைடாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். போலீசார் அவரது சடலத்தை ஒப்படைப்பதற்காக பொள்ளாச்சிக்கு கொண்டு சென்று விசாரித்தனர். ஆனால் அவரது உறவினர்கள் யாரும் அங்கு இல்லை.

இந்நிலையில் 30 ஆண்டாக எங்களுடன் பணியாறிய அவரது சடலத்தை ஒப்படைக்குமாறும், அவரது இறுதி சடங்கை நாங்கள் செய்வதாகவும், ரத்தினத்துடன் கைடாக வேலை பார்த்தவர்கள் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் மூலம் சடலம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: