திருவனந்தபுரம்: சபரிமலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 41 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டிருக்கும். இளம் பெண்களும் தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரின் அனுமதியின்றி எந்த வாகனமும் சபரிமலைக்குள் நுழைய முடியாது. மண்டலபூஜை, மகரவிளக்கு பூஜைகளின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். இந்த ஆண்டு பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இளம்பெண்களும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைனின் பதிவு செய்துள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போராட்டக்காரர்களை சமாளிக்கவும் இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரிடம் முன் அனுமதி பெற்றே சபரிமலை செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கோயில் நடை திறக்கப்பட்ட பிறகு, புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் பதினொட்டாம் படி ஏறி பதவி ஏற்றுக்கொள்கின்றனர். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. கார்த்திகை 1ஆம் தேதி நவம்பர் 17ஆம் நாள் அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நாளையிலிருந்து 41 நாட்கள் வரை அதாவது மண்டல பூஜை வரை கோயில் நடை திறந்திருக்கும். டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை விழா முடிந்த பின்பு, மீண்டும் கோயில் நடை சாத்தப்படும்.