புதுடெல்லி: ‘மத்திய அமைச்சர்கள் மீது வந்த ஊழல் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும்’ என பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி என்பவர், பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் உரிமை மனு மூலம் சில விவரங்களை கேட்டார். அதில், ‘பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது, அதில் எவ்வளவு பணம் இந்திய குடிமக்கள் கணக்கில் செலுத்தப்பட்டது? கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மத்திய அமைச்சர்கள் மீது எத்தனை ஊழல் புகார்கள் வந்தன, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எய்ம்ஸ் அதிகாரிகள் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது உட்பட பல விவரங்களை தெரிவிக்க வேண்டும்’ என கேட்டார்.