தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனை கொத்தவாசல்சாவடி செல்லப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (29). இவர், கடந்த 16ம் தேதி வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் பழனிவேலுவிடம் கத்தி காட்டி மிரட்டி செல்போன் பறித்து தப்பினர்.இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசில் பழனிவேல் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கொத்தவால்சாவடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் இருவர் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, யானைக்கவுனி நடைபாதையில் வசிப்பவர் செல்வன் என்ற பன்னீர்செல்வம் (22), வண்ணாரப்பேட்டை சஞ்சீவராயன் கோயில் தெருவை சேர்ந்த வினோத் (35) என்பதும் பழனிவேலுவிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 5 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள், இரவு நேரத்தில் கூட்ட நெரிசலின்போது செல்போன், பர்ஸ், செயின் ஆகியவற்றை பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.