விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் எம்பி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

விழுப்புரம், டிச. 21: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்பி மீதான அவதூறு வழக்கில் வரும் ஜனவரி 4ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்பி, தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அவரது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பூர்ணிமா வரும் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றையதினம் சி.வி சண்முகம் எம்பி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். அவர் மீது ஏற்கனவே செஞ்சி அருகே நாட்டார்மங்கலம், ஆரோவில், திருசிற்றம்பலம் பகுதியில் நடந்த அதிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரசை அவதூறாக பேசியதாக 3 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் எம்பி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: