பழநி: பழநி மாரியம்மன் கோயிலின் மாசி திருவிழாயொட்டி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தேரோட்டம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் 39 உபகோயில்கள் உள்ளன. இதில் பழநி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இதற்கு பழநி நகர் பகுதியிலிருந்து மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்தாண்டு திருவிழா கடந்த 1ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கம்பம் சாட்டுதல் 5ம் தேதி நடந்தது. கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் கடந்த 12ம் தேதி நடந்தது.