பாடாலூர், மே 4: கடந்த சில நாட்களாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கோடை மழை பெய்தது. மே-4 (இன்று) முதல் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படலாம் என பொதுமக்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். இதனிடையே நேற்று பிற்பகல் பகல் முதல் இரவு வரையிலும் ஆலத்தூர் வட்டார பகுதிகளான பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், விஜயகோபாலபுரம், நாரணமங்கலம், காரை, தெரணி, கொளக்காநத்தம், அயினாபுரம், கொளத்தூர், திம்மூர், சில்லக்குடி, செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், டி.களத்தூர், அடைக்கம்பட்டி, கண்ணப்பாடி, தேனூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடியது.
தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இரவில் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அக்னி நட்சத்திரம் தொடக்கும் முன்பே கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post பாடாலூர் அருகே ஆலத்தூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கோடை மழை appeared first on Dinakaran.