திருப்பூரில் உரிமம் பெறாத குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘சீல்’

 

திருப்பூர், மே 10: திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தினார்கள். இதில் 10 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் சந்தேகத்தின் பேரில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.சி. உரிமம் பெறாமல் இயங்கிய திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகரில் இயங்கிய குடிநீர் நிறுவனம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 2 குடிநீர் நிறுவனங்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் 900 லிட்டர் தண்ணீர் கேன்கள் ஆய்வின்போது சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்து ‘சீல்’வைக்கப்பட்டது. 20 லிட்டர் கேன்களை நன்றாக சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. சேதமடைந்த கேன்களை பயன்படுத்தக்கூடாது. கேன்களில் காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தன் சுத்தம் பேண வேண்டும். வாகனங்களில் குடிநீர் கேன்களை எடுத்துச்செல்லும்போது சூரிய ஒளி பாடாதபடி தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச்செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

The post திருப்பூரில் உரிமம் பெறாத குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘சீல்’ appeared first on Dinakaran.

Related Stories: