தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு இன்றி கிடக்கும் செயற்கை நீரூற்று: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

 

ஊட்டி, நவ.25: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு இன்றி கிடக்கும் செயற்கை நீரூற்றை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இங்கு பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து காணப்படும்.

அதேபோல் பல்வேறு வகையான கள்ளிச் செடிகள், பெரணி செடிகள், அழகு தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் வகையில் கண்ணாடி மாளிகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாப் கார்டன் பகுதியில் செயற்கை நீரூற்று ஒன்று பல லட்சம் செலவில் பூங்கா நிர்வாகம் அமைத்தது.

ஆனால் அதனை பூங்கா நிர்வாகம் முறையாக பராமரிப்பது இல்லை. மேலும், அதில் தண்ணீரும் விழுவதில்லை. இதனால், அந்த செயற்கை நீரூற்று பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நீரூற்று செயல்படாத நிலையில் இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த செயற்கை நீரூற்றை சீரமைத்து சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

The post தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு இன்றி கிடக்கும் செயற்கை நீரூற்று: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: