குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-கலெக்டர் தகவல்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம்,குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ம் தேதி அன்று நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான 2ம் கட்ட சுழற்சி முறை ஒதுக்கீடுமாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்  நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) கலெக்டர் அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022-க்கான அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த ஜனவரி 26 அன்று வெளியிடப்பட்டதன் அடிப்படையில், மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல் மற்றும் கொல்லங்கோடு ஆகிய நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்றது.நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் 384 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில், 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 20 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, 356 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். மேலும், 4 நகராட்சிகளுக்குட்பட்ட 99 வார்டுகளில் 460 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில், 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை திரும்ப பெற்றனர். தொடர்ந்து, 437 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். 51 பேரூராட்சிகளுக்குட்பட்ட 828 வார்டுகளில் 3737 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததில், 28 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 132 வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். 3573 பேர் போட்டியிட உள்ள நிலையில், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட 2 வேட்பாளர்களும், கணபதிபுரம் மற்றும் இரணியல் பேரூராட்சிகளில் தலா 1 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் போதிய அளவு மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளுக்கு 233 வாக்குச்சாவடிகளில் 2,44,531 வாக்காளர்களும், 4 நகராட்சிகளுக்குட்பட்ட 99 வார்டுகளுக்கு 140 வாக்குச்சாவடிகளில் 1,08,731 வாக்காளர்களும், 51 பேரூராட்சிகளுக்குட்பட்ட 828 வார்டுகளுக்கு 951 வாக்குச்சாவடிகளில் 6,71,687 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளார்கள்.நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆற்றூர் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் வரும் 22ம் தேதி அன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும்.மேலும், கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, இவ்வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எதுவும் இல்லை. நாகர்கோவில் மாநகராட்சி,நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தலா 4 பறக்கும் படைகள் 12 குழுக்களாக சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்வார்கள். 51 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 17 பறக்கும் படையினர் என மொத்தம் 75 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: