காட்டு யானைகளை விரட்டகோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

ஆண்டிபட்டி, செப். 23: தேவாரம் பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட வன அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக நேற்று தேனி கே.ஆர்.ஆர் நகரில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேவாரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூன்று காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் தென்னை மரங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும், இந்த யானைகளை கேரளா பகுதியான மதிகெட்டான்சோலை தேசிய பூங்காவிற்கு விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கேரளா – தமிழகத்தை இணைக்கும் சாக்கலூத்து மெட்டு மலை சாலை அமைப்பதற்கு தடை இல்லாத சான்றிதழ் வழங்க வேண்டும். போடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகள் வேட்டையை தடுக்க வேண்டும். வனச்சட்டத்தை மீறும் விதமாக குரங்கணி மலைபகுதிக்கு சினிமா படப்பிடிப்பு வாகனங்களை அனுமதித்து வரும் போடி வனச்சரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு இருந்த போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் தங்களது கோரிக்கையை மனுவாக மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மியிடம் வழங்கிய பின்பு கலைந்து சென்றனர். விவசாய சங்கத்தின் முற்றுகை போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post காட்டு யானைகளை விரட்டகோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: