காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் சிவசேனாபதி கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காங்கயம் கால்நடை திருவிழா நேற்று நடந்தது. கால்நடைத் திருவிழாவில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கயம் அருகே, ஈரோடு செல்லும் சாலையில் உள்ள முள்ளிப்புரத்தில் தனது வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்த இரட்டைக் காளை பூட்டிய மாட்டு வண்டியில் கண்காட்சிக்கு வந்தார். திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை தாங்கினார். கால்நடை திருவிழாவில் பங்கேற்பதற்காக 500க்கும் மேற்பட்ட காங்கயம் இன காளைகளை அவற்றினை வளர்ப்பவர்கள் அழைத்து வந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் காளைகளை பார்வையிட்ட பின் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்தார்களோ அதைவிட பெரிய வெற்றியை வரும் சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு கொடுக்க இருக்கிறார்கள்.