சென்னை: தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படை கடந்த ஒரு வாரமாக தீவிர களப்பணிகளை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஜூலை 24 முதல் 30 வரை நடைபெற்ற நடவடிக்கைகளில், மாவட்ட களப்பிரிவுகள் மொத்தம் 378 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டதுடன், 23 குற்றவழக்குகள் பதிவு செய்யும் வகையில் செயல்பட்டன. மேலும், காணாமல் போன 4 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த காலகட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் 3,711 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள 10,320 இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.மேலும், அறிவுசார் குறைபாடுடைய 9 பேர் மீட்கப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டதுடன், 3 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டன. பள்ளிப் படிப்பை இடைநிறுத்தியிருந்த 62 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.
சென்னை, தாம்பரம், ஆவடி, தூத்துக்குடி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பதிவான சம்பவங்களில் சிங்கப்பெண் சிறப்புப் படை விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் இதுபோன்ற துரித மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
