புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், லண்டன் சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி திமுக எம்பிக்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக கடந்த 16ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவைச் செயலாளருக்கும், மாநிலங்களவை திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா மாநிலங்களவை செயலாளருக்கும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும்-பின்வரும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.
அதன் விவரம் பின்வருமாறு:
காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
