திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிட்காட் தொழிற்சாலையில் அமைந்துள்ள இரும்பு உருக்காலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது, திடீரென ராட்சத பாய்லர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பணியில் இருந்த வடமாநில தொழிலாளர் ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் பணியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்ததால், தீ மளவளவென பரவியது. இதனால் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
