இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது என்?: கனிமொழி கேள்வி

சென்னை: கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண். இவர், மெடிக்கலில் பணிபுரிகிறார். நேற்று இரவு, 7 மணிக்குப் பணி முடிந்து தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிழக்கு ஒன்றிய தவெக செயலர் ரமேஷ், பைக்கில் பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் நிலை தடுமாறி, பெண்கள் இருவரும் விழுந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், ரமேஷுக்குத் தர்ம அடி கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: