மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கடும் வெப்ப அலையால் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் சிக்கி 11 பேர் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கானோர் வௌியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடந்த ஜூன் மாதம் முதல் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சூழலில் தெற்கு மாகாணமான அல்மேரியாவில் சியாரா டி லாஸ் மலைத்தொடருக்கு அருகேவுள்ள லாஸ் காசார்டோஸ் மற்றும் பெடார் ஆகிய வறண்ட நிலப்பரப்பு கொண்ட கிராமங்களில் பயங்கர காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.
இதில் சுமார் 2,370 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்து விட்டனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். 19 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வேறு இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சிலர் கூறினாலும், தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
