சென்னை பள்ளிகளில் நடப்பாண்டில் புதிதாக 25,840 மாணவர்கள் சேர்ப்பு

 

சென்னை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பள்ளிகளில் 35 மேல்நிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 206 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகளில் 1,11,567 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த மாணவ, மாணவியருக்கு சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் நடப்பாண்டில் இதுவரை 25,840 மாணவ, மாணவியர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் செயல்படும் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியருக்கு சிறப்பான கல்வி வழங்கப்படுவதோடு மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாக புதிய பள்ளிக் கட்டடம், சீர்மிகு வள வகுப்பறைகள், கணினி ஆய்வகம், ஆய்வக வசதிகள், வண்ண மேசைகள், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மற்றும் சென்னை பள்ளிகளில் பயின்று மேல்நிலைக் கல்வி தொடரும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, அறிவியல் மற்றும் வரலாற்று தொடர்புடைய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பயறு வகைகளுடன் கூடிய சிற்றுண்டி, 100 சதவீத வருகைப் பதிவினை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை, விளையாட்டு ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், விளையாட்டில் திறம்பட பங்குபெற வைப்பதற்காகவும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள், மாணவர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: