மேட்டூர்: சேலம் மாவட் டம் மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரி கூணான்டியூர் காவிரி ஆற்றில், நேற்று மதியம் சாக்கு மூட்டை ஒன்று மிதந்தது. அந்த மூட்டைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்த மீனவர்கள், மேச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மேட்டூர் டிஎஸ்பி சண்முகசுந்தரம், மேச்சேரி இன்ஸ்பெக்டர் அங்கப்பன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் வந்தனர்.
பின்னர், பரிசலில் சென்று தண்ணீரில் மிதந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி கரைக்கு இழுத்து வந்தனர். அந்த மூட்டைக்குள் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண், கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடல் அழுகி காணப்பட்டதால், இக்கொலை நடந்து 2 நாட்கள் இருக்கும் எனவும், சடலத்தை பரிசலில் கொண்டுச் சென்று ஆழமான பகுதியில் போட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
விசாரணையில், கொலையானவர் சேலம் மேச்சேரி சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த சேட்டு (45) என்பதும், கேரளாவில் உள்ள பேக்கரியில் முறுக்கு சுடும் மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்து உள்ளதும், இதில் பெண் உள்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர். அதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
