சென்னை: ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறார். அந்த மரங்களை ஏலம் விட்டு விற்பனை செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் என்று மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு புறம்போக்கு நிலங்களில் இருக்கும் சீமைக்கருவேலம் (வேலி காத்தான்) மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சிலர் அப்புறப்படுத்தி வருகின்றனர். காஸ் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மாற்று எரிபொருளாக வேலிக்காத்தான் விறகுகள் பயன்படுகிறது.
காரணம் புகை குறைவாகவும் எரியும் தன்மை அதிகமாகவும் கொண்டது. எனவே வணிக ரீதியாக பணம் ஈட்டும் பொருளாதாரம் வருவாய் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு வருவாய் மராமத்து துறை மூலமாக வெட்டப்பட்ட வேலிக்காத்தான் மரங்களை மர வியாபாரிகள் மூலம் ஏலம் விட்டு பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
