புதுடெல்லி: பெண்களுக்கான இடஒதுக்கீடு 2029 மக்களவை தேர்தலிலேயே அமல்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை காரணமாக தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியின் போது காட்டப்பட்ட எதிர்ப்பு காரணமாக தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இந்நிலையில், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையாமல் இருக்க, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தற்போதைய மாநிலங்களுக்கிடையேயான தொகுதி விகிதத்தை தொடரவும் அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் திட்டங்களையும் ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது.
