தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் சிவகிரி டோல் கேட் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி அருகில் இருந்த வயலில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரினுள் இருந்த 5 பேரில் வேலுச்சாமி (51), ஹரிகைலாஷ் மற்றும் கீர்த்தி ஆகிய மூவர் நீண்ட நேரம் உயிருக்கு போராடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரில் பயணித்த முனியாண்டி மற்றும் வசந்த் ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணமடைந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி என 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
