சென்னை: காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசின் முயற்சி வெற்றி பெற தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய எடப்பாடி பழனிசாமி ; கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு காலகட்டங்களில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது எனு பிரதமரை சந்தித்து வலியுறுத்தியவர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டிற்கு உரிய நீரை ஒவ்வொரு ஆண்டும் போராடியே தமிழ்நாடு பெறுகிறது. கர்நாடகா ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தந்ததே இல்லை. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை உள்பட பிற பயன்பாட்டுக்காகவும் 14.75 டிஎம்சி நீரை கர்நாடக அரசுக்குக் கூடுதலாக அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் பெங்களூரு குடிநீர்த் தேவைக்கென 67 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்ட மேக்கேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும்.
இந்த அணை கட்டப்பட்டால், தமிழக மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் கடந்த காலங்களைப் போலவே காவிரி நீரை முழுமையாக தனது உபயோகத்துக்காக கர்நாடகம் பயன்படுத்தும் நிலை உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.
