பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள அழுக்கு சித்தர் சாமியார் கோயிலில், புதுவை முதல்வர் ரங்கசாமி சாமி அமைச்சர்கள் பட்டியலை வைத்து சாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூரில் உள்ள அழுக்குசாமியார் கோயிலுக்கு, புதுச்சேரி முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, முக்கிய நிகழ்ச்சிகளின்போது வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 4ம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, மீண்டும் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி தன்னை தக்கவைத்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று காலையில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நேற்று இரவில், பொள்ளாச்சியில் உள்ள அழுக்குசாமியார் கோயிலுக்கு வந்ததார். பின்னர் முதல்வர் ரங்கசாமி கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதற்கிடையே, என்.ஆர். காங்கிரஸ் அமைச்சரவையில் பங்குபெற உள்ள, அமைச்சர்கள் பெயர் பட்டியலை சித்தர் சாமியார் முன்பு வைத்து வணங்கியதுடன் தீபாராதனை காண்பித்தார்.
பின், கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் வெகுநேரம் அமர்ந்து தியானம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதையடுத்து புதுச்சேரி புறப்பட்டு சென்றார். பொள்ளாச்சி அருகே அழுக்குசாமியார் கோயிலுக்கு திடீரென புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு முன்பும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இங்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
