தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியானது, கோடை மழை குறைவால் வறண்ட நிலையில் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பொழிவு இல்லாததன் காரணமாக கடந்த சில மாதங்களாக சுருளி அருவிக்கு போதுமான நீர்வரத்து இல்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, வெண்ணியாறு மற்றும் தூவானம் அணை பகுதிகளில் பெய்த மழையால், சுருளி அருவிக்கு தற்காலிகமாக தண்ணீர் வந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
ஆனால் தற்போது மழை இல்லாத காரணத்தால் சுருளி அருவிக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று,பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. போதுமான மழை இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் நீர்வரத்து அடியோடு நின்றுள்ளது. இதனால் கோடை விடுமுறையில் உற்சாகமாக அருவியில் குளிக்கலாம் என்று சுருளி அருவிக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்,பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், இப்பகுதியை நம்பியுள்ள உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களும் சுருளி அருவி பகுதியில் தண்ணீர் இல்லாததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சுருளி அருவியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் அருகிலுள்ள கும்பக்கரை அருவி போன்ற இடங்களுக்குச் செல்ல திட்டமிடுகிறார்கள். முன்னதாக, சில சமயங்களில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து சுருளி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதும் உண்டு. ஆனால் தற்போதைய சூழலில் வறட்சியால் அருவி பொலிவிழந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
