சென்னை: ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிகமுக்கிய ரயில் நிலையமாக இருந்து வரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் மொத்தம் 223 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் இந்த மாத (மே 2026) இறுதிக்குள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இந்த நிலையில் இந்த பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பது குறித்து சென்னை ரயில்வே பாதுகாப்புப் படை உயா் அதிகாரிகள் சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வழக்கமான குறிப்பிட்ட காட்சிகளைப் பதிவு செய்யும் வகையில் உள்ளன. ஆனால், தற்போது ரயில்களில் உரிய ஆவணங்களின்றி தங்கம், வெள்ளி மற்றும் ஹவாலா பணம், போதை பொருள்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.
தவிர சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகள் தவிர சம்பந்தமில்லாத நூற்றுக்கண மக்கள் தங்குமிடமாக பயன்படுத்தி வருவதாகவும், அவா்களால் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் புகாா்கள் எழுந்தன. இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கினாலும், திடீரென அப்பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த சூழலில் தற்போது 19 இடங்களில் கம்பம் நட்டு அதில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொருத்தப்படும் கேமராக்களின் வகைகள்:
குறிப்பிட்ட பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் 150 நிலையான கேமராக்கள், மிகத் தெளிவான காட்சிகளைப் பதிவு செய்யும் திறன் கொண்ட 45 UHD கேமராக்கள், அனைத்து திசைகளிலும் சுழன்று படம் பிடிக்கும் திறன் கொண்ட 14 சுழலும் கேமராக்கள், காட்சிகளை பெரிதுபடுத்தி துல்லியமாக பார்க்கும் வசதி கொண்ட 7 ஜூம் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் பொருத்தி முடிக்க ரயில்வே பாதுகாப்பு படை தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.
