சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, குஜராத் டைடன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் 37வது போட்டி சென்னையில் நேற்று நடந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.
சாம்சன் 11 ரன்னில், ரபாடா பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த வீரர்களில் சிவம் தூபே 22, கார்த்திக் சர்மா 12, ஜேமி ஓவர்டன் 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வீழ்ந்தனர். ருதுராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 74 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை, 7 விக்கெட் இழந்து 158 ரன் எடுத்தது. குஜராத் தரப்பில் காகிஸோ ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார். அதையடுத்து, 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் அணியின் துவக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.
இந்த இணை 6.2 ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் அகமது பந்தில் கில் (23 பந்து, 33 ரன்) ஆட்டமிழந்தார். பின்னர், சுதர்சன், ஜாஸ் பட்லர் இணை சேர்ந்து 97 ரன்கள் குவித்த நிலையில், 17வது ஓவரில் 2வது விக்கெட்டாக சுதர்சன் (46 பந்து, 7 சிக்சர், 4 பவுண்டரி, 87 ரன்) அவுட்டானார். 16.4 ஓவரில் குஜராத், 2 விக்கெட் மட்டுமே இழந்து 162 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் அமர்க்கள வெற்றி பெற்றது. பட்லர் 39 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆட்ட நாயகனாக ரபாடா அறிவிக்கப்பட்டார்.
