இளம்பிள்ளை, ஏப்.25: காகாபாளையம் அருகே, சாலையோர புளியமரம் முறிந்து விழுந்ததில், 2 மின்கம்பம் சேதமடைந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே, வேம்படிதாளம் பிரிவு சாலையில், 50 ஆண்டு பழமையான புளியமரம், நேற்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது, அருகில் இருந்த 2 மின்கம்பம் மீது விழுந்ததில் மின்கம்பம் உடைந்தது. உடனடியாக காகாபாளையத்திலிருந்து, இளம்பிள்ளைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலின் பேரில், மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன் பின் ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர், வருவாய்த்துறை உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து வந்து பொக்லைன் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், மரத்தை வெட்டி அகற்றி, மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர். சாலையில் மரம் முறிந்த விழுந்த போது, வாகன ஓட்டிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
