இடைப்பாடி, ஏப். 20: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கும், மின்சார உற்பத்திக்கும் செக்கானூர் கதவணை வழியாக பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் தண்ணீர் தேக்கப்படுகிறது. எப்போதும் கடல் போல் தண்ணீர் தேங்கி இருக்கும். பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் சேலம், ஈரோடு இரு மாவட்டத்தும் இடையான விசைப்படகு போக்குவரத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் தினசரி சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினத்தையொட்டி வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர். பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல்கள், மீன் கடை, கைலாசநாதர் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், மூலபாறை, பெருமாள் கோயில், படித்துறை, சினிமா சூட்டிங் நடந்த வயல்வெள்ளிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
