நாமக்கல், ஏப்.22: நாமக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய, பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது என கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்களில் உள்ள நச்சு தொட்டிகளை (செப்டிக்டேங்க்) சுத்தம் செய்யவும், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் திடீர் அடைப்புகளை சரிசெய்யவும், கட்டணமில்லா தொலைபேசி எண் 14420-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் 48 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்படும். எனவே பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்து கொள்ளலாம். மேலும், பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
