சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஊட்டி நகரில் போலீசார் அணிவகுப்பு

ஊட்டி : சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கும் நிலையில் நேற்று ஊட்டி நகரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது.

இதில், நீலகிரி மாவட்டம் முழுவதும் 736 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், 74 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் கொடி அணி வகுப்பு ஊட்டியில் நடந்தது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் துவங்கிய இந்த அணிவகுப்பு கமர்சியல் சாலை, மணிக்கூண்டு,லோயர் பஜார் சாலை வழியாக சென்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது.

இந்த அணிவகுப்பின்போது, ஆயுதம் ஏந்திய போலீசார் அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பு நீலகிரி எஸ்பி நிஷா தலைமையில் நடந்தது. இதில், கூடுதல் எஸ்பி மணிகண்டன் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கூடலூரிலும் நேற்று போலீசார் அணி வகுப்பு நடந்தது.

Related Stories: