கார் டீ கடைக்குள் பாய்ந்து விபத்து

வாலாஜாபாத், ஏப்.19: ஒரகடம் – வாலாஜாபாத் சாலையில் கட்டவாக்கம் கூட்டு சாலை உள்ளது. இதனை இணைக்கும் பகுதியில் உணவகம் ஒன்றும், டீ கடை ஒன்றும் அருகருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரகடத்தில் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை கார் ஒன்று வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டவாக்கம் கூட்டு சாலையை கடக்கும்போது, திடீரென ஓட்டுனருக்கு ஏற்பட்ட வலிப்பு காரணமாக சாலையின் இடதுபுறம் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தார். அப்போது நிலைதடுமாறி சாலையை ஒட்டி இருந்த தேநீர் கடைக்குள் கார் புகுந்தது. இதில் டீ கடை மாஸ்டர் வெங்கடேசனுக்கு காயங்கள் ஏற்பட்டு அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரில் பயணித்த தொழிற்சாலை ஊழியர்கள் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் இந்த விபத்தில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரகடம் – வாலாஜாபாத் சாலை கட்டவாக்கம் கூட்டு சாலைகள் ஏற்பட்ட இந்த விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: