முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு திமுக எம்எல்ஏவுக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜூலை 20ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, தன்னை சிறையிலடைப்பதற்காக தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஜாமீன் கோரி மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இதுபோல பேசியிருக்க கூடாது எனக் கூறி தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் இனிமேல் இதுபோல் பேசப்போவதில்லை என்று உத்தரவாதம் அளிக்குமாறு உத்தரவிடலாம் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர், இதுபோல் இனிமேல் பேசப்போவதில்லை என்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

Related Stories: