சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மேகதாது அணை கட்டுமானத்திற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். தங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் ஜனநாயக ரீதியில் போராடுவதற்காக சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை மராட்டிய மாநில பாஜ அரசின் காவல்துறை தடுத்து நிறுத்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசு மராட்டிய மாநில அரசிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். காவிரி, மேகதாது பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
