அமைச்சர்-மா.செ. மோதலால் தவெக பொதுக்கூட்டம் ரத்து: நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி

சிவகாசி: சிவகாசியில் நேற்று மாலை நடைபெற இருந்த தவெக பொதுக்கூட்டம், அமைச்சர், மாவட்ட செயலாளர் மோதலால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழக தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கும், தவெக விருதுநகர் வடமேற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வத்திற்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அமைச்சர் கீர்த்தனா பங்கேற்கும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் இதுவரை கலந்துகொள்வதில்லை.

மாரிச்செல்வம் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர் கீர்த்தனாவும் கலந்து கொள்வதில்லை. மாறாக மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், அமைச்சர் ஜெகதீஸ்வரியை வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேற்று காலை சிவகாசியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கீர்த்தனா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் பாவடி தோப்பு திடலில் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் அலுவலகம் முன்பு நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர் கீர்த்தனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவகாசியில் காமராஜரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்தார்.

இதற்காக அமைச்சர் கீர்த்தனா பொதுக்கூட்டம் நடத்திய அதே பாவடி தோப்பு திடலில் நேற்று மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: