கொடுமுடி, ஜூன் 25: ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒத்தக்கடை அருகேயுள்ள கணபதிபாளையத்தில் காங்கயம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
குடிநீர் வீணாவதுடன், சாலையில் நீர் தேங்கி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு, விபத்து அபாயமும் நிலவி வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதற்கு நிரந்திர தீர்வு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த மே 14ம் தேதி செய்தி வெளியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்தனர். இதனால் நீர் கசிவு முழுமையாக தடுக்கப்பட்டு, குடிநீர் வீணாவது நிறுத்தப்பட்டது.
நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
