நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது : ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை : நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தான் அதிகாரிகளின் பணி என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை விராட்டிபத்து நத்தம் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் தற்போது அதனை நீர்நிலை ஆக்கிரமிப்பு என கூறி அதிகாரிகள் வீடை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மனுவில் பவுன்ராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுப்பணித்துறையால் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸிற்கும் தடை விதித்தும் பட்டா வழங்க வேண்டும் என்றும் மனுவில் மனுதாரர் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் புதுக்குளம் கண்மாயை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளதாகவும் இதற்கு பட்டா வழங்க வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,”நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு அதற்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். மேலும் மதுரை புதுக்குளம் கண்மாய், பெரியகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது”,இவ்வாறு உத்தரவிட்டனர்.

The post நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது : ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: