ஒடிசா சட்டப்பேரவை தோல்விக்காக வி.கே.பாண்டியனை விமர்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக் ஆதங்கம்

புவனேஷ்வர்: ஒடிசா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜ 78 இடங்களிலும், பிஜூ ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து நவீன் பட்நாயக் கடந்த 5ம் தேதி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஒடிசாவில் 24 ஆண்டுகால பிஜூ ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது. நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்தான் காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் தோல்விக்கு பிறகு வி.கே.பாண்டியன் மாயமாக விட்டதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் நவீன் பட்நாயக் புவனேஷ்வரில் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது,’ இந்த தோல்வியை மனதார ஏற்று கொள்ள வேண்டும். ஆனால் தேர்தல் தோல்வி தொடர்பாக வி.கே.பாண்டியன் மீதான விமர்சனங்கள் துரதிருஷ்டவசமானவை. பாண்டியன் கட்சியில் சேர்ந்த எந்த பதவியையும் வகிக்கவில்லை. தேர்தல்களில் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. பாண்டியன் ஒரு அரசு அதிகாரியாக கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றினார். குறிப்பாக 2 புயல்களால் ஒடிசா பாதிக்கப்பட்ட போதும், கொரோனா பெருந்தொற்றின் போதும் அவரது பணிகள் அவர் ஆற்றிய பணிகள் மிக சிறப்பானவை.

பணிகளை நேர்மையாக செய்யக் கூடிய பாண்டியன் நினைவு கூரப்பட வேண்டியவர். வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசல்ல என்பதை நான் தெளிவாக சொல்லி வருகிறேன். என் வாரிசை ஒடிசா மக்களே முடிவு செய்வார்கள். அதை நான் மீண்டும் சொல்கிறேன்’என்று நவீன் பட்நாயக் கூறினார்.

The post ஒடிசா சட்டப்பேரவை தோல்விக்காக வி.கே.பாண்டியனை விமர்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக் ஆதங்கம் appeared first on Dinakaran.

Related Stories: