விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.. வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட காத்திருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து..!!

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் சூழலில் அவரை கத்தியால் குத்திய முன்னாள் கணவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆளும் கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக போட்டியில் இருந்து விலகி கொண்டதால், திமுக-வுக்கு போட்டியாக பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள். அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், டி-கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழி (49) என்ற பெண் மீது கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனிமொழியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற அவரது முன்னாள் கணவர் ஏழுமலை (52) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் நடத்தப்பட்ட இந்த கத்திகுத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.. வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட காத்திருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: