புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடுகள்: பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டிய அம்மன் கோயில்கள்

திண்டுக்கல்: புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி பல்வேறு ஊர்களிலும், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகவதியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 800க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை சுற்றி கும்மியடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது நையாண்டி மேளம், வாணவேடிக்கைகளுடன் கடவுள் வேடமிட்டு சென்று மஞ்சளாற்றில் சக்தி கரகம் மற்றும் முளைப்பாரியை கரைத்தனர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சக்தி தளங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மொரணபள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா சித்தர் சக்தி கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற வேள்வியில் மிளகாய் வற்றல் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிப்பட்டனர்.

The post புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடுகள்: பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டிய அம்மன் கோயில்கள் appeared first on Dinakaran.

Related Stories: