பொதுவாகவே, இந்த காலகட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு அம்மாநிலத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து, அதி கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயலுக்கு வாய்ப்புள்ளதாக கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த கனமழை எச்சரிக்கைக்கு மத்தியில், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள சிலாய் பகுதியில், கட்டப்பட்டு வரும் ஓட்டல் ஒன்றின் அருகில் தங்கியிருந்த தொழிலாளர்களின் முகாமை இந்த நிலச்சரிவு முற்றிலுமாக அடித்துச் சென்றது. முகாமில் இருந்த 19 தொழிலாளர்களில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், 9 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவத்தாலும், கனமழை எச்சரிக்கையாலும் சார் தாம் யாத்திரை ஒரு நாள் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
The post உத்தரகாண்டில் கோர நிலச்சரிவு; தொழிலாளர் முகாம் அடித்து சென்றதால் 9 பேர் மாயம்: பக்தர்கள் யாத்திரை தற்காலிக நிறுத்தம் appeared first on Dinakaran.
