டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி (TNPSC, SSC, IBPS, RRB) ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டி தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.

அதன்படி, பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 2025ம் ஆண்டு ஜன.1ம் தேதியன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டி தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை. இந்த பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக நாளை முதல் இம்மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: