பற்களை பிடுங்கிய விவகாரம் அம்பை எஸ்.ஐ, எழுத்தரிடம் அமுதா ஐஏஎஸ் விசாரணை

அம்பை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா உயர்மட்ட விசாரணை நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று புகார் அளிக்க ஒருவர் கூட வரவில்லை. அதே நேரத்தில் அம்பை சப் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி, எழுத்தர் வின்சென்ட் ஆகியோர் நேரில் ஆஜராகினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரியான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அவர் நெல்லை வந்தார். இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா நேற்று காலை 10.10 மணிக்கு அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினார். முதல்நாளில் அம்பை சப்இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி, எழுத்தர் வின்சென்ட் ஆகியோர் ஆஜராகினர்.

பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள் என யாரும் ஆஜராகி புகார் அளிக்கவோ, விளக்கமளிக்கவோ வரவில்லை. ஏஎஸ்பி பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்கள், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீசார் என அனைவரையும் அமுதா ஐஏஎஸ் விசாரிக்க உள்ளார். அதேபோல் கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் நேரடியாக சென்று விசாரணை நடத்துவார் என தெரிகிறது.

The post பற்களை பிடுங்கிய விவகாரம் அம்பை எஸ்.ஐ, எழுத்தரிடம் அமுதா ஐஏஎஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: