தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் 21 கோயில்களில் ரூ.150 கோடி மதிப்பில் 29 புதிய கட்டுமான பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 21 கோயில்களில் ரூ.149.93 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்து சமய அறநிலையத்துறை மூலம் சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் ரூ.38.50 கோடியில் திருமண மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் ரூ.7.14 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ரூ.13.42 கோடியில் ஒன்பது நிலை ராஜகோபுரம் மற்றும் கிரில்களுடன் கூடிய சுற்றுச்சுவர் கட்டும் பணி, கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் ரூ.2.09 கோடியில் முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி, தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ரூ.4.56 கோடியில் திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, தேவதானம்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில் ரூ.3.30 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி;

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.3.76 கோடியில் அமாவாசை மண்டபம் கட்டும் பணி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ரூ.2.50 கோடியில் பசுமடம், குடவாசல் கோணேஸ்வர சுவாமி கோயிலில் ரூ.1.75 கோடியில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ஊத்துக்காடு, கைலாசநாதர் சுவாமி கோயிலுக்கு ரூ.96 லட்சத்தில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, மன்னார்குடி, ராஜகோபால சுவாமி கோயிலில் ரூ.1.20 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி; கோவில்பட்டி பூவநாத சுவாமி கோயிலில் ரூ.2.10 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடியில் மின்தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை ரூ.3.51 கோடியில் தார் சாலை சீரமைக்கும் பணி;

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.40.03 கோடி யில் திருமண மண்டபங்கள் மற்றும் பணியாளர்கள் நிர்வாக பயிற்சி மையம் கட்டும் பணி, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.1.50 கோடியில் பெரியாழ்வார் திருவரசு மேம்படுத்தும் பணி, சென்னை, உத்தண்டி பிடாரி அகிலாண்டம்மன் கோயிலில் ரூ.1.50 கோடியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி என மொத்தம் ரூ.149.93 கோடி மதிப்பில் கோயில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தர மோகன், அறநிலையத் துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், அறநிலைத் துறை ஆணையர் முரளீதரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் 21 கோயில்களில் ரூ.150 கோடி மதிப்பில் 29 புதிய கட்டுமான பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: