பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து

பெங்களூரு: பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்துக்கு இன்று காலை 5.45 மணிக்கு உத்யான் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. ரயிலில் இருந்து பயணிகள் இறங்கிச் சென்ற நிலையில், அந்த ரயிலில் காலை 7.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிகளவில் புகை வரத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் விரைந்து வந்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்தை ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தீ விபத்தால் மெஜஸ்டிக் அருகே உள்ள சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம் பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. தீப்பிடித்த கோச்சில் இருந்து மீதமுள்ள பெட்டிகள் பிரிக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாகவும், விசாரணைக்கு பிறகே முழுமையான காரணம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: