ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பட்ட பக்தர்கள், பணியாளர்கள் பிரச்னை தீர்க்கப்பட்டது: அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள், கோயில் பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் அனைவரையும் அழைத்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஓட்டேரி, சேத்துப்பட்டு, சூளை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழ்நாடு முதல்வர் ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து தீர விசாரித்து தவறுகள் இருப்பினும் அதன் மீது நடவடிக்கை ஒரு புறம் என்றாலும் சுமுகமாக முடிக்க உத்தரவிட்டார். அந்த வகையில் பக்தர்கள், கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் ஆகியோரை அழைத்துப் பேசி நேற்றைய தினமே இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இந்த பிரச்னையை இன்னும் ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள் சென்னையில் பெய்த பெரும் மழை வெள்ளத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தார்கள்.

பெருமழை பெய்து கொண்டிருந்தபோதே களத்தில் கால் பதித்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின். நிவாரணப் பணிகள் ராணுவ மீட்பு நடவடிக்கை போல் போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டதால் களத்திலே அரசு ஒரு புறம் என்றாலும், எங்களைப் போன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றியதால் இயல்பு வாழ்க்கை இரண்டு நாட்களில் திரும்பியது. இதிலும் அரசியல் செய்ய முடியவில்லை என்பதற்காக தற்போது பழைய பல்லவியை புது மெட்டில் பாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த பிரச்னையில் யாரையும் கைது செய்யவில்லை. இரு தரப்பிலும் பாதிப்புகள் ஏற்பட்டது. முழுமையாக ஆராய்ந்து அதன் மீது சட்ட நடவடிக்கை ஒரு புறம் என்றாலும், சுமூகமான சூழ்நிலை நிலவுவதற்கு மறுபுறம் நடவடிக்கை எடுத்து அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் அனைவருக்கும் முழு திருப்தி ஏற்படும் வகையிலான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா ராஜன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், மண்டலக் குழுத்தலைவர் பி.ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பட்ட பக்தர்கள், பணியாளர்கள் பிரச்னை தீர்க்கப்பட்டது: அமைச்சர் சேகர் பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: