நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் கணவர், மகள் இறந்த துக்கத்தாலும், நோயாலும் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து இறந்தார். அவரது மகனும் தூக்கி தற்கொலை செய்து கொண்டார். சைக்கோ போல பூட்டிய வீட்டில் தாய்க்கு திதி கொடுத்த திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.

திருவாரூரை சேர்ந்தவர் சர்வானந்தம். இவரது மனைவி ஆனந்தி(67). இவர்களது மகன் ராம் குமார்(34), மகள் கிரிஜா(31). சர்வானந்தம் பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்ததால் பெரம்பலூரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 8 வருடங்களுக்கு முன்பு சர்வானந்தம் இறந்தநிலையில், பெரம்பலூர் தனியார் கல்வியியல் கல்லூரியில் பிஎட் படித்து வந்த கிரிஜாவும் கடந்த 2019ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் ரில் வேறு ஒரு வீட்டில் குடியிருந்து வந்த ஆனந்தி, அந்த வீட்டில் மம்மி மம்மி என தனது மகள் தன்னை அழைப்பது போல் இருந்ததால் வீட்டை மாற்றி, முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஓராண்டாக மகனுடன் குடியிருந்து வந்துள்ளார்.  ராம்குமார் திருச்சியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் போட்டோகிராபராக  ராம்குமார் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனந்திக்கு சர்க்கரை நோய் இருந்த காரணத்தால் இரண்டு கால்களிலும் புண் ஏற்பட்டு செப்டிக் ஆகியுள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியே வராண்டாவுக்கு வந்தால் கூட பாதத்தில் பிளாஸ்டிக் பையை சொருகிக் கொண்டுதான் வெளியே வந்து அமர்ந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக பெரம்பலூர் போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது கதவு உள் புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆனந்தியின் சடலம் துணியால் போர்த்தப்பட்டிருந்ததும், அவரது அருகில் விஷப்பாட்டில் இருந்ததும், சடலத்தை சுற்றி இறந்தவருக்கு திதி கொடுப்பது போல் அருகம்புற்கள், எலு மிச்சை பழங்கள், ஆரஞ்சு, ஆப்பிள் பழங்கள் அருகில் வைக்கப்பட்டிருந்தன. வீட்டில் உள்ள சாம்பார் பொடி, மிளகாய் பொடி சுற்றிலும் தூவப்பட்டிருந்தது. சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. மற்றொரு அறையில் சீலிங் பேனில் ராம் குமார் தூக்கு மாட்டி இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது சடலமும் அடையாளம் தெரியாத அளவு அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் எஸ்பி சியாமளாதேவி நேரில் வந்து விசாரணை நடத்தினார். இருவரது உடல்களும் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசும்படி இருந்ததால் அரசு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அந்த வீட்டிலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இருவரது உடல்களும் ஆத்தூர் சாலையில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது.

உருக்கமான கடிதம் சிக்கியது
இறந்து போன ஆனந்தி தான் இறப்பதற்கு முன்பாக மகனுக்கு உருக்கமாக எழுதிய கடிதத்தில், ‘மகனே நீ நன்றாக இருக்க வேண்டும். நமது குல வழக்கப்படி எனது சடலத்தை எரிக்க வேண்டாம், புதைத்து விடு. சர்க்கரை வியாதி காரணமாக எனது கால்கள் இரண்டும் செப்டிக் ஆனதால், என்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது. எனக்காக நீயே சமைப்பது எல்லா வேலைகளையும் பார்ப்பது வருத்தம் தருகிறது. வேலுவிடம் ஒரு லட்சம் கடன் தொகையை கொடுத்து விடு. இனி அவன் என் முகத்தில் விழிக்கவே கூடாது. கிரிஜா என்னை அடிக்கடி மம்மி மம்மி என அழைப்பது போன்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நான் தங்கையிடமே செல்கிறேன்’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.

The post நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: