புதுகை மாநகராட்சியுடன் இணைக்க 11 ஊராட்சி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

*தாசில்தாரிடம் மனு அளித்தனர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றைகையிட்டு தாசில்தாரிடம் மனு அளித்தனர்.நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 15ம் தேதி தரம் உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில் அந்த மாநகராட்சியோடு புதுக்கோட்டையை சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைத்தால் ஊராட்சிக்கு கிடைக்க வேண்டிய பல சலுகைகள் கிடைக்காமல் போகும்.

அதனால் மாநகராட்சி தங்களுக்கு வேண்டாம் ஊராட்சியே போதும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க வேண்டாம். மாநகராட்சியோடு தங்கள் ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும். வரி விதிப்பு அதிகமாகும். ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் பறிபோகும். அதனால் எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம். ஊராட்சியே போதும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர், வருவாய் துறையினரின் அனுமதியோடு கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு வெளிப்படுத்துவதாக தெரிவித்து கோரிக்கை மனுக்களை தாசில்தாரிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தாசில்தாரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post புதுகை மாநகராட்சியுடன் இணைக்க 11 ஊராட்சி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: